குருவிக்கொண்டான்பட்டி

முன்பு குருவிக்கொண்டான்பட்டியில் வேளாளர்கள் வசித்து வந்தனர். அப்பொழுது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர் (குரு) இல்லை. அக்காலத்தில் நகரத்தார்கள் தங்களுக்காக ஒரு குருவைக் கொண்டு வந்ததால் இவ்வூர் குருவிக்கொண்டான்பட்டி என்று அழைக்கபட்டது.

மேலபத்தூர் வட்டகையைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது. புதுக்கோட்டையில் இருந்து குழிபிறை - இராங்கியம் வழியாக 33கி.மீ தொலைவில் உள்ளது. ஒன்பது நகரக்கோவில்களில் ஒன்றான இளையாத்தங்குடியில் இருந்து 6கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

10.02.2006 வரை குருவிக்கொண்டான்பட்டியில் பிள்ளையார்பட்டி - 55, மாத்துர் - 35, சூரக்குடி - 63, இளையாத்தங்குடி - 29, ஒக்கூர் - 23, வைரவன்கோவில் - 22, இரணிக்கோவில் - 72, இலப்பைகுடி - 03 ஆகிய 7 கோவில்களைச் சேர்ந்த 302 நகரத்தார் குடும்பத்தினர் (புள்ளிகள்) வாழ்ந்து வருகின்றனர்.

மீனாட்சி சொக்கலிங்கம் திருக்கோவில் நகரகச் சிவன்கோவிலாகும். இத்திருக்கோவில் நகரத்தார் பெருமக்களால் 1905ஆம் ஆண்டில் பாலாலயம் அமைத்து கல் திருப்பணியைத் தொடங்கி குடமுழுக்கு விழா 20.01.1932ல் நடைபெற்றது. மேலும் திரு.சிவ.கரு.முத்தையா செட்டியாரின் உபயமாக 18.06.1970ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்றைய தலைமுறையினரால் 02.09.1992 மற்றும் 10.02.2006ல் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலட்ச அர்ச்சனை நடத்துப்பட்டு வருகின்றது. தற்போது ஆண்டுதோறும் நகரத்தார் பிள்ளையார் நோம்பும் ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு வருகின்றது.

ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை நடைபெறும் சொக்கலிங்கம் மீனாட்சி வித்யாசாலை நகரத்தாரால் 1950ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது.

நகரத்தார் குடும்பத்தால் நன்கொடை அளிக்கப்பெற்ற அ.சொ.சொக்கலிங்கம் செட்டியார் அரசு மருத்துவமனை இவ்வூரில் தொண்டாற்றி வருகிறது.

ஊர்மக்களும் நகரத்தார்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து மற்ற ஊர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.


முக்கிய தொலைபேசி எண்கள்  |  சேவைகள்  |  புகைப்படங்கள்  |  கோவில்கள்  |  விழாக்கள்  |  படைப்பு வீடு

காரியக்காரர்

ஒவ்வொரு நகரத்தார் ஊர்களும், அங்கு உள்ள ஊர் சிவன் கோவிலும், ஒரு வருட காலத்திற்கு நிர்வகித்து வருபவர்கள் அவ்வூரின் காரியக்காரர் என்று அழைக்கப்படுவர்.

குருவிக்கொண்டான்பட்டியின் காரியக்காரர்கள், குருவிக்கொண்டான்பட்டியில் வாழும் நகரத்தார் கோவிலை சேர்ந்தவர்கள் வருடத்திற்க்கு ஒருவர் விதம் தேர்ந்து எடுக்கப்பட்டு நிருவகித்து வருவார். இது சுழற்ச்சி முறையில் நடந்து வருகிறது.

நகரத்தார்

நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் புள்ளி ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இனம் நகரத்தார் இனம். ஆனால், நூறு கோடி மக்களும் வாழ வழிகாட்டிய பெருமைக்குரிய இனம் நகரத்தார் இனமாகும்.

"தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டை சுடுவான்" என்ற தத்துவம் சொன்ன பட்டினத்தார் பிறந்த பெருமைக்குரிய இனமாகும்.

பண்டிதமணி கதிரேசனார், பாடுவார் முத்தப்பர், ஒப்பில்லா கவி சொன்ன கண்ணதாசன், உலகிற்கு கம்பனைக் காட்டிய கம்பனடிப்பொடி சா.கணேசன், காலம் போற்றும் சொ.முருகப்பா, தமிழ்க்கடலாம் ராய.சொ., தமிழ் காத்த கருமுத்து தியாகராசர், குழந்தைக்குக் கவி சொன்ன வள்ளியப்பா, குறுநாவல் படைத்த அரு.இராமனாதன், கல்கண்டாம் தமிழ்வாணன், சின்னத்திறை கண்ட ஏ.வி.மெய்யப்பர், இவர்கள் மட்டுமல்ல, எண்ணற்ற கவிஞர்களை அறிஞர்களை தமிழுக்கு தந்த இனம் நகரத்தார் இனம்.

மதுரையை ஆண்ட பாண்டியனுக்கும், மருது சகோதரர்களுக்கும் பின்னால் சிவகங்கைச் சீமையை உள்ளடக்கிய செட்டிநாட்டில் ஒன்பது நகரக்கோவிலுடன் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கியதோடு தெந்திருப்பதியை கண்ட பெருமையை பெற்ற இனம் நகரத்தார் இனமாகும்.

இப்படி பொது நோக்கத்தோடு வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற இந்த நகரத்தார் இனத்தில் பிறந்ததற்கு நாங்கள் "என்ன தவம் செய்தோமோ!".

வரலாறு

நாட்டுக் கோட்டை நகரத்தார்கள், தமிழகத்தின் மிகத் தொன்மையான இனங்களில் ஒரு வகையினர். இவர்கள் மிகச்சிறிய மக்கள் தொகையினராக இருந்தாலும், தேசமெங்கும் பேசப்படும் புகழ் பெற்றவர்கள். அதற்கு காரணம் அவர்கள் பண்பாடும், பெருமையும் தான்.

நகரத்தார் சமுகம் ஆரம்ப காலங்களில் சோழ மன்னரின் கீழ் வாழ்ந்தவர்கள்.

இவர்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து கடல் வழியாக ஸ்ரீலங்கா, பர்மா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் தங்கள் வாணிபத்தை வளர்த்தனர். வாணிபம் மட்டுமல்லாது அதனுடன் ஆன்மீகத்தையும் அந்தந்த நாடுகளில் வளர்த்தனர். இன்றும் இந்த நாடுகளில் முருகன் கோவில் இருப்பதை காணலாம். பிணாங்கு, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள முருகன் கோவில் நகரத்தார்களால் கட்டப்பெற்றது. மேலும் நகரத்தார்கள் கல்வி மற்றும் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் உள்ளவர்களாக திகழ்கின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தியாகராசர் கல்லூரிகள் எடுத்துக்காட்டாகும்.

நகரத்தார் சமுகம் பாண்டிய மன்னனிடம் தஞ்சம் அடைந்தவர்கள். அதற்கு காரணம் சோழ மன்னன் நகரத்தார் பெண்ணின் மீது கொண்ட காதல். நகரத்தார்கள் மன்னரிடம் அப்பெண்னண திருமணம் செய்ய வற்புறுத்தினர், ஆனால் மன்னர் மறுத்துவிட, நகரத்தார் சமுகத்தை சார்ந்த அனைத்து மகளிரும் மாண்டனர், ஆண்கள் பாண்டிய மன்னனிடம் தஞ்சம் அடைந்தனர். பாண்டிய மன்னன் நகரத்தார்களிடம் அவர்களுக்குரிய இடத்தை தேர்ந்து எடுத்து கொள்ள சொன்னார், அப்பொழுது அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் செட்டிநாடு.

பாண்டிய மன்னன் நகரத்தார் வம்சம் வளர அவர்களை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதனால் நகரத்தார் ஆண்கள் சைவ வெள்ளாளர் சமுகத்தை சார்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் நகரத்தார் சமுகம் சைவ வெள்ளாளர் சமுகத்தில் இருந்து பெண் எடுத்துக்கொள்வர் ஆனால் பெண் கொடுப்பது இல்லை. இதனால் கூட நகரத்தார் தந்தையை அப்பச்சி என்றும், அம்மாவை ஆத்தா என்றும் அழைப்பதற்க்கு காரணமாக இருக்கலாம்.